நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

07 December 2011

நம்பிக்கைகள் துளிர்க்கின்றன

நடும் விதைகளெல்லாம் 
மரமாவது இல்லை
பல நேரங்களில் 

ஆனால்...
விழும் விதைகள் கூட
முளைத்து விடுகின்றன
சில நேரங்களில்

நடுவது 
நம் செயல் என்றாலும் 
பின் எழுவது 
விதைகளின் விடாமுயற்சியே 

மனித மனதிலே
வேதனைகள் விருட்சமாகின்றன 
பல நேரங்களில் 
நம்பிக்கைகள் துளிர்க்கின்றன
சில நேரங்களில்

நடப்பதும் அதை முடிப்பதும் 
நம் கையில் இல்லை 
என்றாலும்... 

வேதனைகளை உடைத்து
சாதனைகளை படைப்பது
விடா முயற்சிகளும்
விழா நம்பிக்கைகளுமே..! 

06 December 2011

ஒரு கவிதை சொல்ல வேண்டாம்

இன்றாவது நீ பேசுவாயா?
இல்லை..
எப்போதும் போலவே
தென்னை மரக்கீற்றாய்
தலைமுடி அசைய நிற்பாயா?
வார்த்தைகளை தொலைத்து விட்டாய்
என்ன செய்யட்டும் உன்னை?
தண்டனையாய்...! 
புல்வெளியில் தள்ளிவிடட்டுமா?
மலர்களால் அடிக்கட்டுமா?
இல்லை..
மழலையாய் முதுகிலேறி குதிக்கட்டுமா?
சொல்..
இப்பொழுதே பேசி விடு
மழை வரப்போகிறது
நனைந்தபடி நீ பேசினால் 
தவளைக்கும் தொண்டை கட்டிவிடும்
யார் தடுக்கிறார்கள் உன் வார்த்தைகளை?
இந்த குட்டிப்பூனை மீசையா?
முறைக்காதே!
சுமைதாங்கி பார்த்திருக்கிறேன்
மௌனம் தாங்கியை 
இப்பொழுதுதான் பார்க்கிறேன்
கோவப்பட்டாவது பேசேன்!
வார்த்தை சப்தங்களுக்கு பதிலாய் 
முத்தசப்தங்கள் தர முயற்சிக்கிறாய் 
என்ன இது? ம்ம்.. 
ஒரு கவிதை சொல்ல வேண்டாம்
என்னை காதலிப்பதாய் சொல்
இனி நான் மௌனமாகிவிடுவேன்!



01 December 2011

உன் பெயர்தான் அதற்கும்


சண்டைகளின் பொழுது  
வார்த்தைகளை தேடுகிறாய்
சாமாதானங்களின் பொழுது 
ரோஜாவை தேடுகிறாய்
எப்பொழுது தான்
என் மனதை தேடுவாய்?

காதலிக்கும் பொழுது
கணக்கில்லாமல் கொடுத்தாய் 
சண்டைகள் போடாமலிருக்க 
கல்யாணத்திற்கு பின்னரோ
கடமைக்கு கொடுக்கிறாய் 
சண்டைகள் முடிந்த பிறகு

சிறு குழந்தையெனவே அழுகிறேன்
நம் சண்டைகளின் நடுவில்
நடிப்பென சொல்கிறாய்
நான் நடிகை இல்லை
உன் காதலி 

நம் ஒவ்வொரு சண்டைகளையும்
உடனே மறந்து விடுகிறாய்
நாம் காதலித்த கணங்களை
மறந்ததை போலவே 

எப்போதும் என்னுடன் இருக்கிறது
நீ கொடுத்த கரடிபொம்மை ஒன்று
அதனுடனும் நான் சண்டைபோடுகிறேன்
சண்டைகள் முடிந்த பின் 
அதுமட்டும் மன்னிப்பு கேட்காது 
உன் பெயர்தான் அதற்கும் 

01 November 2011

நாளையும் மழை நீடிக்குமாம்


நாளையும் மழை நீடிக்குமாம்
நீ போடும் சண்டைகளை போலவே
மௌனமாய் எதிர்கொள்கிறேன் 
குடை இருந்தும் நனைபவனாய்
இடி இடியென கத்திவிட்டு
மின்னல் வேகத்தில் கண்களை கசக்கி  
மழையென கண்ணீர் சிந்துகிறாள் 
முடிவில் நனைந்தது என் சட்டை 
மழை பிடிக்கும் 
என்று சொல்லி
குடை பிடிக்கிறாள்
என்னை பிடிக்கும் 
என்று சொல்லி
நண்பன் என்கிறாள் 

18 August 2011

இரவும் நிலவும் நீயும்

கண்களில் 
தூக்கமும்
கனவுகளும்
நிரம்பி வழிய
சட்டென வந்த 
உன் நினைவினால் 
நானும் கலைந்துவிட்டேன்  

இரவெல்லாம் கண்விழித்து
முடிவில் கண்டுபிடித்தேன்
உறக்கம் கலைவது
உன்னால் மட்டுமே என்று 

13 August 2011

நீ சிணுங்குகிறாய் காதலியாய்

உன்னை வரையும் போது
சிலிர்த்து நிற்கிறது தூரிகையும்
ஓவியமாய் நீ இருந்தாலும்
பேசமறந்து நிற்பது நானே



காதலுடன் பார்க்கிறேன்
என்னை நானே 
கண்ணாடியிலும்
உன் கண்களிலும்

நீ கடித்து 
பாதி தந்ததால் 
சிவந்து போனது 
கொய்யாப்பழம்

நீ அழைக்கும் போதுமட்டும்
காதலாய் சிணுங்குது கைபேசி
அழைப்பை ஏற்றபின்
காதலுடன் சிணுங்குகிறாய் நீ
   
சிறு வயதில் 
பள்ளிகூட வாசலில் 
அம்மா காத்திருந்திருப்பாள் 
உன் வருகைக்காய்
கல்லூரி வாசலில் 
காத்திருக்கிறேன் நான் 
உனக்கே உனக்கென 
இன்னுமொரு அம்மாவாய்

புத்தகம் பேனா பென்சில்
எல்லாம் தொலைத்தது போல
என் இதயத்தையும்  தொலைத்துவிடாதே
எங்கேனும் பத்திரப்படுத்தி வை
மைனாக்களை ரசிக்கிறேன் என்று
மையிட்ட கண்களினால் 
முறைத்தபடி நிற்கிறாள்  
என் முன்னே
இறகுகளை ரசிக்கட்டுமா
இல்லை
இமைக்கவும் மறந்து  
இவளை ரசிக்கட்டுமா?!

04 August 2011

பிரிவுக்கு ஓர் ஒத்திகை


பிரிவுக்கு ஒத்திகை பார்க்கிறாய்
நிஜமெனவே அழ துவங்குகிறேன்
செய்வதறியாது திகைக்கிறாய்
மென்மையாய் அணைத்து பின் 
சிறுகுழந்தையை சமாளிக்கும் தாயெனவே 
மெல்லிய குரலில் சொல்கிறாய் 
என்னையும் அழைத்து போவதாய்
நம்பி சிரிக்கட்டுமா?
இல்லை நம்பாமல் அழட்டுமா?!

03 August 2011

காதல் பேசேன்


******************************************************

ஏதாவது சொல்
எதிர்பாராத நேரத்தில் சொல்
ஆனால்
நான் எதிர்பார்ப்பதை சொல்

"KISS ME or KILL ME"
"MISS ME or MARRY ME"
"LOVE ME or LEAVE ME"
BUT never ever say "FORGET ME
******************************************************

பெண்ணே! உன் மீது கொண்ட காதலால்..

சிட்டு குருவி ஒன்று 
தினமும் நீ குளிக்கையில்
எட்டிஎட்டி பார்த்து போகிறது 
ரசித்து சிரிக்கிறாய் அதற்காக
எதிர்வரும் பெண்களை
நான் ஏறிட்டு பார்த்தாலே 
ஏன் இப்படி கோபப்படுகிறாய்?
வேறு வேறு நியாயங்களா 
உனக்கும் எனக்கும்..!

மீசைக்குள் ஒளித்து வைக்கிறேன்
என் கோபங்களையெல்லாம்
எல்லாம் வெளிப்படுகின்றன
முத்தங்களாய் உன் முன்னே

கூட்டத்திலும் பேசாதவன்
தனிமையிலும் பேசிக்கொண்டே இருக்கிறேன்
பெண்ணே! உன் மீது கொண்ட காதலால்.. 

பள்ளியிலும் கல்லூரியிலும்
படிக்காமல் சுற்றிதிரிந்தவனை
இரக்கமின்றி படிக்கவைக்கிறாய்
இரவு பகலாய்
அப்போது போலவே
இப்போதும் தோற்கிறேன்
உன் இதயத்தை படிக்கமுயன்று..

உனக்கெனவே வாங்குகிறேன் 
கரடி பொம்மைகளை 
ஆனால்.. பொறாமையோடு



28 July 2011

உன் நினைவுகளின் நெரிசலில்


உன் நினைவுகளின் நெரிசலில் 
சிக்கி தவிக்கும் வாகனமாய் 
என் இதயம் 

வயதான தம்பதிகளை கடக்கையில்
நம்மை ஒப்பிட்டு பார்க்கிறேன்
எவ்வளவு வயதானாலும்
சிறு குழந்தையெனவே நீ
நடக்கிறாய் என்னருகினில் 
இறுக்கமாய் கைகளை பிடித்தபடி

எதிர்படும் குழந்தைகள்
சிரித்து போகிறார்கள்
உன்னை பார்த்து மட்டும்

பேசிக்கொண்டே நடக்கிறாய்
யார் மீதும் இடிக்காமல்
அப்படியே நடக்க முற்பட்டு
இடித்துக்கொள்கிறேன் உன் வார்த்தைகளில்

உன்னுடன் நடக்கையில் மட்டும்
தூரங்கள் குறைகின்றன
என் துன்பங்களும் தான்

திடீரென என் மீது
பட்டு நகர்கிறாய்
அப்பொழுதெல்லாம் தாண்டுகிறேன் 
சாலைகளின் எல்லைக்கோடுகளை


ஏதேனும் வாங்கவேண்டுமா
என்று கேட்கையில்
இல்லை என்னும் 
உன் ஒருநொடி பார்வையில்
எதிர்வரும் வாகனங்களும்
நின்று செல்கின்றன

சாலை ஓர மரங்களெல்லாம் 
பூக்களை உதிர்கின்றன
நீ கடந்து செல்கையிலே
என்றாலும்..  
ஓரமாய் நடக்கிறாய்
அவற்றைக்கூட காயப்படுத்தாமல்

தினம் நடக்கும் பாதையிலே
உனக்கு தெரிந்தவர்களாய் 
ஓராயிரம் மனிதர்கள்
யாருமே தெரிந்ததில்லை 
என் கண்களுக்கு
உன்னை தவிர


சும்மா நடக்கும் வேளையிலும்
உதவி போகிறாய்
பல உயிர்கள் வாழ்வதற்கு 
நானும் வாழ்கிறேன்
உன்னுடன் நடக்கையில் மட்டுமே 

*******************************************************************************
வாகனஓட்டிகள் உன்னை கண்டதும் 
நிற்கிறார்கள் 
உன்னுடன் இருக்கும் என்னை 
கவனிக்கிறார்கள்
உடனே 
செல்கிறார்கள்
ஏக்கமான கண்களையும்
ஏமாற்றமான இதயத்தையும் 
அபராதமாய் செலுத்தியபடி  

*******************************************************************************

22 July 2011

வேலைக்கு நேரமாச்சு


எனை கொல்லும் பல நேரங்கள்
நான் வெல்லும் சில நேரங்கள்
திறமை காட்டி எடுக்கப்படும்
பிச்சையென மாத சம்பளம்

ஏறுவதிலுள்ள சிரமம்
இறங்குவதில் இல்லை
வனம் தொலைத்த தேவதையாய்
எனை நானே தொலைக்கிறேன்

உறக்கத்திற்கு ஏங்கும் விழிகள் 
ஆடைகளுடன் ஐக்கியமாகிவிட்ட கைகள்
மரத்துப்போன சதையாய் இதயம்
மூடியே இருக்கும் மூளையின் மடிப்புகள்

பயணங்களில் புத்தகங்கள்
ஆனால், மனிதர்களை மட்டுமே படித்தபடி 
எதிர்ப்படும் மனித முகங்கள்
நானே தானா?
 
வெப்பத்துடனும் மழையுடனும்
நீளும் என் தீண்டுதல்கள்
உடையும் நீர்குமிழிகளாய்  
என் கண்களிலே
 
நிறுத்த முடியாத 
நீண்ட ஒரு பயணமாய் கற்பனைகள்
பெண்மைக்கான நாட்களிலும்
எதை மாற்றவும் நேரமின்றி

ஓடவும் நிற்கவும் 
அதுவே இயலாத கடிகாரமென 
வாழ்க்கை அமைந்த பின்
 
ஒரே கையென 
யானை சுமக்கும் தும்பிக்கையாய்
நானும் சுமக்கிறேன் நம்பிக்கையை   

07 June 2011

இலை மறைக்கும் பூக்கள்

*****************************************************


கைப்பிடியில் இருந்து
திமிரும் குழந்தையாய்
என்னுடைய காதலும்
அவளுடைய மறுதலிப்பும்
*****************************************************

குறுஞ்சிரிப்புடன் மறுத்திருக்கலாம்
அவள் மீதான என் காதலை
குமுறி அழுது மறைக்கிறாள்
என் மீதான அவளின் காதலை
***************************************************** 

காணாமல் போனவர்கள் பட்டியலில்
என் இதயமும் இப்பொழுது
தொலைந்த இடமும் 
தொலைக்கப்பட்ட விதமும்
ஏன்.. 
தற்போதைய அதன் இருப்பிடமும் 
அவளறிவாள் நன்றாகவே
இருந்தும் மறுதலிக்கிறாள்
அப்பாவி குற்றவாளியாய்
*****************************************************

நீண்ட நகங்களுக்கு 
நக சாயம் பூசுவது போல
நான்.. 
நீட்டிய ஒற்றை ரோஜாவுக்கு 
நட்பு சாயம் பூசுகிறாள்
*****************************************************


உணவருந்த பிடிக்கா
ஒரு முழுநிலவு இரவில் 
தின்றுகொண்டிருக்கிறது என்னை
அவளின் நினைவுகள்.. 
*****************************************************

நான் வேண்டுவது 
கூடை பூக்கள் இல்லை
அவள் சூடியிருக்கும்
ஒற்றை ரோஜாவை.. 
*****************************************************

நானறிந்த ரகசியம்
அவளின் காதல்
நானறியா ரகசியம்
அவள்..
*****************************************************

30 May 2011

அவள் அழுகையில்


அவள் அழகு
அவள் அழுகையில் 
அழகோ அழகு.. 

அவள்.. 
அழுவதையே விரும்புகிறேன்
சிரிப்பதை விட
அப்போது தானே
மூக்கை துடைப்பாள் 
என் சட்டை பிடித்திழுத்து 

அவள் அழுகையில்
சற்றே நனையும் 
காதோர தலைமுடி   
மயிலிறகு...
மழையில் நனைவதை போல

அழுகையிலும் 
அழகாய் அழ 
எப்படி முடிகிறது
அவளால் மட்டும்?!

அழுதுகொண்டே..
அதற்காய் வெட்கம் கொண்டு
சற்றே சிரிக்க முயன்று
பின் தோற்று 
மெல்ல விசும்புகையில்
ஒரு மிட்டாயை நீட்ட தோன்றுகிறது
அவளின் முன்னே 

சிவந்திருக்கும் கண்களும்
படர்ந்திருக்கும் கண்ணீரும்
பனியின் நடுவே ரோஜாக்களாய்  

திடீர் மழை போலவே
அவளது கண்ணீரும்
அழுது முடிந்த பின்னும்
இமைகளில் ஈரம்  
இலைகளின் நீராய்

28 May 2011

அவளின் பிரிவினிலே

*************************************************


உவமைகளுக்கு உட்பட்டது 
'காதல்'
உவமைகளுக்கு அப்பாற்பட்டது 
'பிரிவின் வலி'
*************************************************

25 May 2011

குடைக்குள் உன்னை இழுக்கையிலே



இரவெல்லாம் விடாமல் மழை
இடைவிடாமல் உன் நினைவுகளும் 
விடிந்தபின்னும் சாலையெங்கும் ஈரம்
அனிச்சையாய் கன்னத்தை துடைக்கிறேன்
******************************************************

மழைநாளின் இரவில் 
மின்சாரம் தடைபட்டாலும்
கண்கள் பறிக்கும் 
மின்னல் வெளிச்சமாய் 
உயிரை பறிக்குது 
அன்பே! உன் நினைவுகள்
அருகில் நீ இல்லாதபொழுதும் 
******************************************************

பள்ளமென்றும் பாராமல் 
வெள்ளமென பாயும் நீராய் 
என் குறைகள் மறைக்கும்  
உன் அன்பு காதல்
******************************************************

நீலமான வானத்தை நோக்கினால் 
அது நீ தானடி!
அதில் 
தினம் ஒரு வடிவெடுக்கும் 
மேகம் நானே தான்
வானத்தை போலவே..
நீயும் மௌனமாய் நோக்கியபடி
என் மாற்றங்களையும் 
உன் ஏமாற்றங்களையும் 
****************************************************** 
  
அன்பே! 
மழை நீர் சுமக்கா
மேகம் இருக்கக்கூடும் 
காதல் நினைவுகள் சுமக்காத இதயம்
ஏதும் இருக்கக்கூடுமா என்ன?!
***************************************************** 

எதிர்ப்படுகையில் 
உதட்டில் விழும் 
ஓர் மழை துளி
எதிர்பாராமல் நீ தரும்
சிறு முத்தமென 
*****************************************************

நனையாதே என்று
குடைக்குள் உன்னை இழுக்கையிலே  
நனைகிறேன் நான் 
உன்னாலே உன்னாலே..
*****************************************************

24 May 2011

பொறுப்பில்லா பையன், பிடிக்கல..




படிக்க தெரியுமா பத்திரிக்கைகளை?
வடிக்க தெரியும் சாதத்தை 
மேடைகளில் பேசியதுண்டா?
கடவுள் முன் பாடியதுண்டு
நண்பர்கள் தோழிகள் என்று...?
அம்மாவும் தங்கையும் மட்டுமே 

பெண் விடுதலை பற்றி?
பெரிய கருத்து எதுவுமில்லை
அரசியல் பற்றிய அலசல்கள்..?
துணி அலச தெரியும் 
கிரிக்கெட் பார்ப்பதுண்டா?
எப்போதும் இல்லை

வலைதளத்தில் பதிவுகள் என்று?
நேரமிருந்தது இல்லை 
கவிதைகள் கட்டுரைகள்..?
கோலம் போடுவேன் நன்றாய்
பங்கு சந்தையில் ஈடுபாடு?
தபால் அலுவலகம் தாண்டியதில்லை 
கிரெடிட் கார்டு?
வரவுக்குள் செலவு செய்வேன்


ஆங்கில படங்கள் பார்த்ததுண்டா?
தமிழில் சில படங்கள் பார்த்ததுண்டு 
பந்தயங்கள் கட்டியதுண்டா?
பார்த்தது கூட இல்லை
பார்ட்டி டான்ஸ் என்று..?
நான்காம் வகுப்பில் பரதநாட்டியம்..
கைபேசி..?
அவரசத்திற்கு மட்டுமே.. 

அலுவலகத்தின் வருமானம்?
அம்மாவிடம் கொடுத்துவிடுவேன் 
வேறு விருப்பங்கள்?
தோட்டம், தியானம், எளியவருக்குதவி  
கோவம் வருமா?
அடிக்கடி கிடையாது
உன் அம்மா, அப்பா..?
தெய்வங்கள்..
என் அம்மா, அப்பா பற்றி?
தெய்வத்தினும் மேலான தெய்வங்கள்

என்னை பற்றி உன் கருத்து?
.......................... (மௌனம்) 
என்னுடைய விருப்பங்கள் ஏதுமில்லை உன்னிடம் 
சரி... பரவாயில்லை 
உனக்கு ஏதாவது கேட்க வேண்டுமா?
எனக்கு தெரிந்தது ஏதாவது உங்களுக்கு..?
.......................... (தெரியாது என்ற மௌனம்)

இனிதே முடிந்தது
பெண் பார்க்கும் படலம்
பையனிடம் அம்மா பதில் கேட்க
"பிடிச்சிருக்கு.. பொறுப்பான பொண்ணு"
பெண்ணிடம் அம்மா கேட்க..
"பொறுப்பில்லா பையன், பிடிக்கல" 

23 May 2011

காணமல் போன அன்று அவன்..


நேற்றுமுதல் காணவில்லை 
சிறு சண்டையினால் தொலைந்துவிட்டான் 

தொலைந்த அவனால்
உறக்கம் தொலைக்கிறேன்
உணவு மறக்கிறேன்
கனவுகளும் வரவில்லை
கவிதைகளும் எழுதவில்லை
தொடுத்த பூக்களாய் 
தொடருது அவன் நினைவுகளே

கண்டுபிடிப்போருக்கு பரிசு உண்டு
ஆனால்..
கேட்டுவிடாதீர்கள் பரிசாய் அவனையே 

அங்க அடையாளங்கள் சொல்கிறேன்
அழகானவன் அவன் 
காணமல் போனது 
நீல நிற சட்டையிலே 

குழந்தை தலைமுடி 
கொஞ்சம் மட்டுமே தலையில் 
அப்பளபூ நெற்றியை 
அடிக்கடி சுருக்குவான்
சிறுபருப்பு கண்கள்
குறுகுறுவென பார்க்கும் 

மிளகாய்பழ மூக்கு
மேலும் சிவக்கும் கோவத்திலே 
அரிந்த மாங்காய் போல் மீசையோ 
குத்தும் முத்தம் குடுக்கையிலே  
கால் படி கழுத்து
திரும்பும் பெண்களை பார்த்ததுமே  

புல் முளைத்த மார்பு
கரடிபொம்மை போலிருக்கும்
கைகால் முளைத்த 
நீண்ட மரம் போல 
நெடுநெடுவென இருப்பான்
வாத்து மிதப்பது நீரில்
இவன் நடப்பது நிலத்தில் 

இன்னும் சொல்லலாம்தான்
ம்ம்..
நீங்களுமே அவனை விரும்பிவிட்டால்?!

அவன்.. 
கணக்கிலே புலி
கவிதையிலே வாலி
எங்கேனும் மறைந்திருந்து
எழுதக்கூடும் ஒரு கவிதை
என்னை திட்டியாவது

தொலைவது போல் நடித்து 
தூரத்தில் ரசித்திருப்பான்
ன்னுடைய தவிப்புகளை..
பொல்லாத காதல்
'போடா' என்று சொல்லிவிடலாம்
ஆனால்..
விளையாட்டு இன்னும் முடியவில்லையே 


Related Posts Plugin for WordPress, Blogger...